2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை! - கலைஞர் டி.வி. விளக்கம்
இது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை:
2007-08-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) விவகாரத்திற்கும் 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினிiக் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது.
ஆனால் 2 நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2009-ம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது. அந்த தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது.
இந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த்தனையும் சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே ஆகும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.