2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: அருண்ஷோரிக்கு சிபிஐ சம்மன்!!
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தணிக்கை துறை கூறியதை தொடர்ந்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிபோன் நிறுவன அதிபர் ஷாகீத் பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்யும் திட்டத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை பரவலாக்கி உள்ளது. இதற்காக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றவர்கள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருடைய பட்டியலையும் சேகரித்துள்ளது. இவர்கள் ஒவ்வொரு வரிடமும் விசாரணை நடக்க இருக்கிறது. அவர்கள் தவறு செய்தது தெரிய வந்தால் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 2001 பாரதீய ஜனதா கட்சி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. எனவே அந்த ஆட்சி காலத்திலும் முறைகேடு நடந்ததா? என்பதை கண்டுபிடிக்க 2001-ம் ஆண்டில இருந்தே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி 2001-ம் ஆண்டில் இருந்து நடந்த ஒவ்வொரு ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. பாரதீய ஜனதா கட்சி காலத்தில் 2003-ம் ஆண்டு ஒருமுறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருந்தார். இவர்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 'முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு' என்ற நடைமுறையை கொண்டு வந்தார்.
அருண்ஷோரி வழியில்...
இதை பின்பற்றித்தான் ஆ.ராசாவும் ஒதுக்கீட்டை செய்ததாகச் சொன்னார். இதில் முறைகேடு நடந்ததாக இப்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே அருண்ஷோரி காலத்தில் ஒதுக்கீடு முறை மாற்றப்பட்டதிலேயே ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என சி.பி.ஐ. கருதுகிறது.
இதனால் அருண் ஷோரியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்தது. இதற்காக அருண் ஷோரிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 21-ந் தேதி அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அருண்ஷோரியிடம் சி.பி.ஐ. நடத்தும் விசாரணை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அவர் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவரும் கைதாக வாய்ப்புள்ளது.