திமுக கூட்டணியில் எத்தனை சீட் கிடைக்கும் என்று தெரியாது-திருமா
பெரம்பலூர்: எனக்கு முதுகெலும்பு ஒன்றும் முறிந்துவிடவில்லை. அதனால் நான் எந்த பக்கமும் சாயமாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தமிழக வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜ் சகோதரர் திருமணத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அந்த விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசியதாவது,
விடுதலை சிறுத்தைகள் சாயும் சிறுத்தைகள் என்று சிலர் பேசுகிறார்கள், எழுதவும் செய்கிறார்கள். எனக்கு ஒன்றும் முதுகெலும்பு முறிந்துவிடவில்லை. அதனால் நான் எந்த பக்கமும் சாயமாட்டேன்.
மீண்டும் அதைத் தான் உறுதிபடுத்துகிறேன். என்னவாக இருந்தாலும் சரி, நான் திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து இருப்பேன். கடந்த 1999ம் ஆண்டு அரசியல் இயக்கமாக அடியெடுத்து வைத்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் 8 ஆண்டுகள் திமுகவுடன் தான் இருக்கிறோம்.
இடையில் 2 ஆண்டுகள் மட்டும் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இருக்கும் உறவு தேர்தல் சீட்டுக்காக இருப்பதன்று, கொள்கைக்காக இருக்கும் உறவு. வெறும் தேர்தல் சீட்டுக்காக, வெற்றி- தோல்விக்காக உறவு வைப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள் அல்ல.
நாங்கள் கேட்டதை எல்லாம் வாரி வழங்கி இருக்கிறார் கலைஞர். ஸ்பெக்ட்ரம் என்ற ஒரு வார்த்தையால் திமுக கூட்டணியை வீழ்த்திடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது நடக்காது.
எங்கள் கட்சிக்ககு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்கு வங்கி உள்ளது. திமுக கூட்டணியில் எத்தனை சீட் கிடைக்கும் என்று தெரியாது. எந்தெந்த தொகுதிகள் என்று கூட தெரியாது. ஆனால் கூட்டணி பற்றி பேரம் பேச எங்களுக்கு விருப்பமில்லை என்றார்.