ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் 18000 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று மீண்டும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிலை திரும்பியுள்ளது. கிட்டத்தட்ட 1 மாதத்துக்குப் பிறகு மீண்டும் 18000 புள்ளிகளைக் கடந்துள்ளது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று நல்ல முன்னேற்றம். 110 புள்ளிகள் உயர்ந்தது நிப்டி குறியீட்டெண்.
பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 18089.64 புள்ளிகளாகவும், நிப்டி 5420 புள்ளிகளாகவும் இருந்தது.
பெரிய நிறுவனங்களின் பங்குளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் இன்று பெரும் விருப்பம் காட்டினர்.
டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, பிஎச்இஎல், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இன்போஸிஸ் பங்குகள் இன்றைய பங்குச் சந்தைப் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் இந்த சாதகமான போக்கை இன்று பிற்பகல் வரை காண முடிந்தது.