காமன்வெல்த் ஊழல்: வெளிநாட்டு ஆலோசகர் என்ற பெயரில் ரூ.12.5 லட்சம் சுருட்டிய சசிதரூர்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது, வெளிநாட்டு ஆலோசகர் என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் சசி தரூருக்கு 12 நாள் பணிக்காக, ரூ.12.5 லட்சம் சேவைக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.இது தொடர்பாக காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவர் சுரேஷ் கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன. அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
போட்டிகளை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்க பல வெளிநாட்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் சசி தரூரும் அடக்கம்.
12 நாள் கூட்டத்துக்கு வந்த அவர் தந்த ஆலோசனைகளுக்காக ரூ. 12.5 லட்சம் அவருக்கு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் அவரது துபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
2009ம் ஆண்டு சசி தரூர் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்தபோது இந்தக் கட்டணம் தரப்பட்டுள்ளது. அமைச்சராக இருக்குநம் ஒருவர் தனிப்பட்ட முறையில் வேறு எந்த விதத்திலும் பணம் சம்பாதிக்க முடியாது. எனவே இதுபற்றி விசாரணை நடைபெறுகிறது.
இது குறித்து தரூர் கூறுகையில், நான் காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டாளர்களை விதத்திலும்அணுக வில்லை. அவர்கள்தான், என்னை அங்கு வந்து உரையாற்றும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் நான் சென்று ஆலோசனை வழங்கியதற்கான பணத்தை பெற்று இருக்கிறேன்.
இதில் எந்த முறைகேடு நடக்கவில்லை. பணத்தை அதிகாரப்பூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் வாங்கி இருக்கிறேன். துபாய் வங்கி கணக்கில் நான் பணத்தை பெற்றது முறைகேடு அல்ல.
இது, நான் ஒரு சிறிய உரை நிகழ்த்த பெறும் தொகையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவு. ரிசர்வ் பாங்க் விதிமுறைப்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், வங்கி கணக்குகளை வைத்துக் கொள்ளலாம். இதன்படியே, துபாயில் வங்கி கணக்கை வைத்திருந்தேன் என்றார்.
மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எல். கொச்சி அணியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள பங்குகளை தன் 3வது மனைவி சுனந்தா புஷ்கருக்கு பெற்றுத் தந்து சர்ச்சையில் சிக்கியலர் தரூர் என்பது நினைவுகூறத்தக்கது.