புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி : 350 ஸ்பின்கோ தொழிலாளர்கள் கைது
புதுச்சேரி: ஊதிய உயர்வு வழங்கக் கோரி புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்ற திருபுவனை ஸ்பின்கோ தொழிலாளர்கள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை திருவாண்டார் கோவிலில் கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) செயல்பட்டு வருகிறது. அங்கு 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தரக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. இதையடுத்து புதுவை முதல்வர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி சுதேசி மில் அருகே கூடிய தொழிலாளர்கள் அங்கிருந்து முதல்வர் இல்லம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் அவர்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே சென்றபோது போலீசார் அவர்களை வழிமறித்தனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் சுமார் 350 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது தொழிலாளர்கள் 2 வேன்களின் கண்ணாடிகளை கள் வீசி உடைத்ததாகக் கூறப்படுகின்றது. ஸ்பின்கோ தொழிலாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வே அளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.