காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து முன்னணியினர்
சென்னை: இந்து முன்னணியினர் காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் நாய்களை குதிரை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து திருமணம் நடத்தி வைத்தனர்.
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை. ஒரு பக்கம் காதலர்கள் கொண்டாட்டம், மறுபக்கம் காதலர் தின எதிர்ப்பு போராட்டங்கள் என சென்னை மாநகரம் பரபரத்தது.
காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் சென்னை புளியந்தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதனப் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்து முன்னணியினர் முன்னிலை வகித்தனர். அவர்கள் 2 நாய்களை அலங்கரித்து 2 குதிரைகளில் ஊர்வலமாக அழைத்து வந்து மந்திர முழக்கத்தோடு அவைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
இந்த நூதன திருமண விழாவில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காதலர் தினத்தை கொண்டாட தடைவிதிக்க வேண்டும் என்றனர்.