காஷ்மீர் வரைபடத்திற்காக எங்களை பாராட்ட வேண்டும்: மெகபூபா
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சிவப்பு நிறத்தில் சுட்டிக் காட்டியதற்காக எங்களை பாராட்டாமல் விமர்சிப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தை மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை பச்சை நிறத்திலும், சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சிவப்பு நிறத்திலும் சுட்டிக் காட்டியிருந்தது. இவ்வாறு செய்வது அவ்விரு நாடுகளின் ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது போல் உள்ளது என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து மெகபூபா அளித்த விளக்கம் வருமாறு,
ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சுட்டிக்காட்டவே தனியாக சிவப்பு வண்ணம் பயன்படுத்தினோம். அதற்காக முறையே எங்களை பாராட்ட வேண்டும்.
காஷ்மீரின் லே பகுதியை சீனா ஆக்கிமிரத்து வருகிறது. அதைப்பற்றி கவலைப்படாத உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனியாக விசா வழங்குவதைப் பற்றி பேசுகிறார். சீன ஆக்கிரமிப்பை உடனே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததைப் போன்று அனைத்துப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைக்கப்பட வேண்டும்.
காஷ்மீர் பிரச்னையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு தீர்வு காண இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள இந்த வரைபடத்திற்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சில பகுதிகளை அயல் நாடுகளுக்கு தாரை வார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது. பிடிபி கட்சி வெளியிட்டுள்ள வரைபடம் தவறானது. சர்ச்சைக்குரியது. வரைபடத்தில் வண்ண நிறங்களில் காட்டப்பட்ட பகுதிகள் வெளிநாடுகளுக்கு சொந்தமானது என்று கூறுவதைப் போல உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.