உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரேமானந்தா: தீவிர சிகிச்சை
ராயபுரம்: மஞ்சள் காமாலை நோய்க்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமானந்தா சாமியார் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், கல்லீரல் பாதிப்பு காரணமாக மஞ்சள் காமாலை நோய் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த நோய்கள் அனைத்தும் முற்றியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சுயநினைவை இழந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர் குணமடைவார் என்று அவரது சீடர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.