ராசாவின் உறவினரிடம் சிபிஐ விசாரணை-நண்பர் சாதிக் பாட்சாவுக்கும் சம்மன்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நண்பரும், சென்னை கிரீன் ஹவுஸ் நிறுவன அதிபருமான சாதிக் பாட்சாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் புதன்கிழமை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ம் விவகாரம் தொடர்பாக சிபிஐ ரெய்ட் நடத்திய இடங்களில் சாதிக் பாட்சாவின் வீடுகள், அலுவலகங்களும் அடக்கம்.
ராசாவின் உதவியோடு மிகக் குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் பெற்ற ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் வழங்கிய லஞ்சப் பணத்தை துபாயில் முதலீ்டு செய்வதிலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யவும் ராசா தரப்புக்கு சாதிக் பாட்சா உதவியதாக சிபிஐ கருதுகிறது.
இந்தப் பணத்தை ஹவாலா முறையில் துபாய்க்கு இவர் கொண்டு சென்றதாகக் கருதப்படுவதால் இவரிடம் அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தவுள்ளது. மேலும் இது தொடர்பான மேலும் விசாரணைகளுக்காக சிபிஐ குழு விரைவில் துபாய் செல்லவும் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டதைப் போல பல்வாவும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராசா உறவினரிடம் சிபிஐ விசாரணை:
இந் நிலையில் ராசாவின் உறவினர் ரங்கராஜனிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்க.
டெல்லி சி.பி.ஐ.அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது.
ஜாமீன் பெற ராசா முயற்சி:
இந் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், ராசா இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜாமீன் கிடைக்காவிட்டாலும், சிறையில் இருந்து நாடாளுமன்ற கூட்டத்துக்குச் சென்று வர, அவர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி கோரலாம் என்றும் தெரிகிறது.
வழக்கு நிலுவையில் இருந்த பல எம்.பிக்கள் இது போல், போலீஸ் பாதுகாப்புடன் நாடாளுமன்ற கூட்டத்திற்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராசா மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது, அது தொடர்பாக நாடாமன்றத்தில் எந்த விளக்க அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இந்தக் கூட்டத் தொடரின்போது சபாநாயகரின் அனுமதி பெற்று விளக்க அறிக்கை தாக்கல் செய்யவும் ராசா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.