'எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்'..கவுண்டமணி பாணியில் தா.பாண்டியன்
சென்னை: அதிமுக கூட்டணியில் சிபிஐக்கு எத்தனை சீட் என்ற கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அதுகுறித்து ஜெயலலிதாதான் தீர்மானிப்பார் என்று பேசியுள்ளார்.
ஒரு படத்தில், பயில்வான் ரங்கநாதன், தனது மனைவியின் கேள்விகளுக்கு, எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் என்று பதிலளிப்பார். இதைக் கேட்டு டென்ஷனாகி, மேலே ஒளிந்திருக்கும் கவுண்டமணி, எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்னா, கீழே இருக்கிறவன் என்ன செய்வான் என்று கேட்டு ரகளையாக்குவார். அந்த ஜோக்தான் ஞாபகத்திற்கு வருகிறது தா.பாண்டியன் பேச்சைக் கேட்கும்போது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை சீட் என்ற கேள்விக்கு, அதை அதிமுக பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார் என்ற ரீதியில் பதிலளித்துள்ளார் பாண்டியன்.
தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் டிஸ்டிரிபியூஷனை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. குட்டிக் கட்சிகளுக்கு ஒரு சுற்று தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்ட அவர் தற்போது இடதுசாரி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் கட்டத்தை எட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தையை நிறைவு செய்துவிட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில், "விரைவில் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு ஏற்படும்' என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க. இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர்கள் சி. மகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான அணியை அமைப்பது, திட்டமிடுதல் குறித்து தொடர்ந்து பேசிவருகிறோம். இன்னும் சில தினங்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். அதை இறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. தலைமையிடம் உள்ளது.
தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியின் வெற்றிப் பயணம் தொடரும். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என்பதை சில தினங்களில் அறிவிப்போம் என்றார்.