2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி: வீட்டில் வேலை-சிபிஐ முன் ஆஜராகாத அருண் ஷோரி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக பாஜக முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் அருண் ஷோரி நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார். குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய வீட்டு வேலை இருப்பதால் தன்னால் வர முடியவில்லை என்று சிபிஐக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் புன்னியவான் வேடம் போட்டு வரும் பாஜகவின் ஆட்சியில் தான் முதலில் வருபவர்களுக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் என்ற முறையும், வேண்டியவர்களுக்கு அதை ஒதுக்கித் தரும் முறைகேடும் ஆரம்பித்தன.
இந்த விஷயத்தில் மறைந்த பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந் நிலையில் அருண் ஷோரியை நேறறு விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியது சிபிஐ.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிட்டியும் பாஜக ஆட்சியில் தான் இந்த விவகாரத்தில் முறைகேடுகளுக்கு வித்திடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இந்தக் கமிஷன் முற்றிலும் தவறாகவும், உண்மையை திரித்து கூறியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கபில் சிபல், ராஜாவின் வக்கீல் போல் செயல்படுவதாகவும் அருண் ஷோரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவர் நேற்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் இன்னொரு நாள் ஆஜராவார் என்று தெரிகிறது.
வீடியோகான் அதிபரிடம் விசாரணை:
இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் வாங்கியது தொடர்பாகவும், அது தொடர்பான பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் மற்றும் அவரது மகன் ராஜ்குமாரிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது.