சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்-கலெக்டர்களுடன் 26-ம் தேதி ஆலோசனை
நெல்லை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படும் சூழ்நிலையி்ல் வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படூம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சில் முழு வீ்ச்சாக இருக்க, தேர்தலை சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் ஓட்டு போட முக்கிய ஆவணமாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டை நகல் வழங்க அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்து அரசி்யல் கட்சிகளுடன் ஆலோசனையும் நடந்துள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்து ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் சென்னையில் வரும் 26-ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள், ஓட்டுச் சாவடிகள் விபரம், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு, வாக்காளர் அடையாள அட்டை பணிகள் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.