முதல்வர் கருணாநிதிக்கு நான் பாராட்டு தெரிவிக்கவில்லை-நன்மாறன் எம்.எல்.ஏ மறுப்பு
மதுரை: முதல்வர் கருணாநிதியை தான் பாராட்டியதாக வந்த செய்திகளை மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என். நன்மாறன் மறுத்துள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என். நன்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நான் பேசும்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகவல் தொழில் நுட்ப துறைக்கான மானியத்தின் மீது வெட்டுத் தீர்மானத்தின் வாயிலாக சென்னையில் உள்ளது போல் மதுரையிலும் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
இதனைச் சுட்டிக்காட்டி தனது பதிலுரையில் முதல்வர் கருணாநிதி, எனது பெயரைச் சுட்டிக்காட்டி ஏற்றுக் கொண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பு செயல் வடிவம் பெறுவதற்காக சட்டமன்றத்தில் வினா விடை நேரங்களைப் பயன்படுத்தினேன்.
மதுரை தகவல் தொழில் நுட்பபூங்கா எந்த நிலையில் உள்ளது என்ற எனது வினாவிற்கு முதல்வர் கருணாநிதி அரும்பு நிலையில் உள்ளது என்றார். மற்றொரு சமயம் எப்போது அடிக்கல் நாட்டப்படும் என்று கேட்டேன். அதற்கும், கல் தயாரானவுடன் நாட்டப்படும் என்றார். இதனைத் தான் நினைவு கூர்ந்து விழாவில் பேசினேன்.
ஆனால், சில ஏடுகள் முன் கூட்டியே தமிழக முதல்வர் என்னை அழைத்து இவ்வாறு பேசுங்கள் என்று தெரிவித்து அதன் மீது தான் நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிவித்து அதற்காக முதல்வரை பாராட்டுவதாகவும் கூறி செய்தியை வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தியாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் ஊழியனாக சட்டமன்றத்தில் செயல்படும் வாய்ப்பை பெற்று மக்களின் கோரிக்கைகளை மன்றத்தில் எதிரொலிப்பதையே எனது வாழ்நாள் கடமையாக கொண்டு வருகிறேன்.
அந்த அடிப்படையில் தான் இந்த கோரிக்கையும் எழுப்பப்பட்டது. தற்போது அது நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.