திருமா மீண்டும் வந்தால் அனுமதிக்கப்படுவார்! - இலங்கை அரசு
பார்வதியம்மாளின் மரணச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை அவர் கொழும்பில் இறங்கியபோது அனுமதி மறுக்கப்பட்டு, அடுத்த விமானத்திலேயே திருப்பியனுப்பப்பட்டார்.
'அவர் ஒழுங்கான முறையில் தனது வருகையின் நோக்கத்தைத் தெரியப்படுத்தவில்லை.அதன் காரணமாகவே அவர் திருப்பியனுப்பப்பட்டார்' என்று அந்நாட்டின் குடியேற்றத்துறை அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களின் அத்துமீறல் குறித்து மிகுந்த கொந்தளிப்புடன் உள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக அரசியல்வாதியொருவரை அங்கு அனுமதிப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று கருதியதனாலேயே அவர் திருப்பியனுப்பப்பட்டதாகவும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆயினும் அவர் விமான நிலையத்தில் வைத்து பார்வதி அம்மாளுடைய இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள மட்டுமே வருகை தந்திருப்பதாக தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் அதிகாலையிலே அவருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்போது கூட மீண்டும் அவர் இலங்கை வரும் பட்சத்தில் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகளில் மட்டும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது இலங்கை.