சொத்து குவிப்பு: ஜெ.வை விடுவிக்க பேரம்-போலி நீதிபதி கைது
மதுரை: பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்க அதிமுக எம்.பி. மைத்ரேயனிடம் பேரம் பேசிய போலி நீதிபதி முத்து விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் முத்து விஜயகுமார்(52). அவர் மேலூர் நீதிமன்றத்தில் ஜூனியர் பெய்லீப்பாக பணியாற்றி வருகின்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு எழுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவின் மகன், மருமகனுக்கு மதுரை நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 45 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த ஜனவரி மாதம் அதிமுக எம்.பி. மைத்ரேயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தன்னை நீதிபதி தினகர் என்று கூறியுள்ளார். மேலும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்க பேரம் பேசியுள்ளார். இதுமட்டுமின்ற் அவர் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரிலும் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
விஜயகுமார் மதுரை நீதிமன்றத்தில் தோட்டக்காரராகச் சேர்ந்தவர். பின்பு அலுவலக உதவியாளராகவும், ஜூனியர் பெய்லீப்பாகவும் பணியாற்றினார். பணி நிமித்தமாக, மதுரை மாவட்ட நீதிபதிகள் பலரிடம் வேலை செய்தார். அவர்களில் பலர், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டனர். சிலர் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடனும் தனக்கு பழக்கம் என்று கூறி, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று அவரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரது வீட்டை சோதனையிட்ட போது வேலை மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான 15 விண்ணப்பங்கள், மூன்று மொபைல் போன்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின் முகவரி, போன் எண்கள் கொண்ட புத்தகம், முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் காரில் பயன்படுத்தும் சைரன் போன்றவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.