தமிழகத்தில் இன்றும் மழை-மாம்பழ உற்பத்தி பாதிக்கப்படும்
சென்னை: தமிழகத்தில் இன்றும் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எப்போதுமில்லாத அதிசயமாக பிப்ரவரி மாதத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. காற்று மண்டலத்தில் மேகக் கூட்டங்களிடையே சுழற்சி ஏற்பட்டுள்ளதால் இந்த மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.
தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 150 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 110 மில்லி மீட்டர் மழை பெய்தது.
அதே போல சூளகிரி, மாரந்தஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), பூதப்பாண்டி, கிருஷ்ணகிரி, பேச்சிப்பாறை, ஆம்பூர், வாலாஜாபேட்டை, பென்னாகரம், வால்பாறை, பெரியகுளம், காவேரிப்பாக்கம், வேலூர், பாலக்கோடு, ராமகிருஷ்ணராஜுபேட்டை, செம்பரம்பாக்கம், பூண்டி, கமுதி, சோளிங்கர், வாடிப்பட்டி, உத்தமபாளையம், மீனம்பாக்கம், திருவாலங்காடு, திருத்தணி, கும்பகோணம், முதுகுளத்தூர், போளூர், ஒகனேக்கல், ஒசூர், ராயக்கோட்டை, கூடலூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சோழவரம், கொரட்டூர், புழல், தாமரைப்பாக்கம், புதுச்சேரி, கடலாடி, தக்கலை, சாத்தனூர் அணை, வாணியம்பாடி, அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆண்டிபட்டி, தேனி, கொடைக்கானல், காரைக்குடி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பகலில் வெப்ப நிலை 73 டிகிரி அளவுக்கே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை மாம்பழ உற்பத்திக்கு பாதிப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.