தொகுதிப் பங்கீடு: திமுக குழுவுடன் வாண்டையாரினன் மூவேந்தர் முன்னேற்ற கழகம் பேச்சுவார்த்தை
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகம் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீ்க் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் உள்ளது.
இந் நிலையில் மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், கட்சியின் நிர்வாகிகள் ரவி வாண்டையார், நம்பிவயல் ரவீந்திரன் ஆகியோர் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினரை சந்தித்துப் பேசினர்.
பின்னர் நி்ருபர்களிடம் பேசிய ஸ்ரீதர், எங்கள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி தஞ்சையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மான கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தோம். தமிழ்நாட்டில் எங்கள் கட்சிக்கு 70 தொகுதிகளில் 5,000 முதல் 20,000 ஓட்டுக்கள் வரை உள்ளன. இந்தத் தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்.
எங்களுக்கு கணிசமான தொகுதி ஒதுக்கும்படி கேட்டு உள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது எங்களுக்கு எத்தனை தொகுதி என்பது முடிவாகும். இந்த சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன். முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடரும். திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள் என்றார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:
முன்னதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பிரநிதிகள் திமுக குழுவுடன் பேச்சு நடத்தினர்.
கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன், பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் நேற்று காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய காதர் மொய்தீன்,
திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தோம். அந்த கோரிக்கைகள் கனிவுடன் ஏற்கப்பட்டது. தொகுதி பங்கீடு சம்மந்தமாக பேச்சுவார்த்தை சுமூகமாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் எங்களுக்கு வாணியம்பாடி, அரவக்குறிச்சி, பாளையங்கோட்டை ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதன் பின்பு பாளையங்கோட்டை தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தோம். இந்த முறை கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாகூரில் நாளை (24ம் தேதி) நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் தெரிவிப்போம். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அப்போது எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும். திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். இது வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றார்.
திமுகவுக்கு அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு:
இந் நிலையில் திமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சி தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், மதுரையில், நிறுவனர் தலைவர் பி.என்.அம்மாவாசி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாவாசி,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, 6வது முறையாக முதல்வர் கருணாநிதியை அரியணையில் ஏற்றி அமரவைப்பது எனறும், கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைப்பது என்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.