உணவுப் பணவீக்கத்தைக் குறைக்க விவசாயிகள் மண்டி, மொபைல் பஜார்!! - மத்திய அரசு சிறப்பு நடவடிக்கை
டெல்லி: நாட்டில் நிலவும் உணவுப் பணவீக்கத்தைக் குறைப்பதே அரசின் முன் உள்ள இப்போதைய முதன்மைக் குறிக்கோள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் சாமானியர்களின் வாழ்க்கை நிலையை புரட்டிப் போடும் விதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது அனைத்துப் பொருள்களின் விலைகளும். இதனால் உணவுப் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, முதல் கட்டமாக விவசாயிகளுக்கான மண்டிகள் மற்றும் நடமாடும் பஜார்களை (Farmer Mandis and Mobile Bazaars) உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த மண்டிகள் மற்றும் பஜார்கள், மாநில அளவிலான பொது விநியோகத் திட்டத்துடன் இணைக்கப்படும். இவற்றை கணிப்பொறி மூலம் ஒருங்கிணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக அரசின் பதிலை சமர்ப்பித்தார் நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா.
மேலும் உணவுப் பொருள் விலையைச் சீராக்க, வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு சட்டத்தை மறு ஆய்வு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் வழங்கல் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக மண்டிகளுக்கான வரிகள், நகர் நுழைவு வரி மற்றும் உள்ளூர் வரிகளை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு நேற்று கேட்டுக் கொண்டது.
வேளாண் பொருள் ஏற்றுமதி ரத்து!
சாமானிய மனிதனைப் பாதிக்கும் உணவுப் பணவீக்கத்தைக் குறைக்க விலையை நிலைப்படுத்துவதோடு, குறிப்பிட்ட முக்கிய வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்வதை இப்போதைக்கு தடை செய்திருப்பதாகவும் அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல சில முக்கிய விவசாயப் பொருள்களின் இறக்குமதிக்கு இறக்குமதி தீர்வை உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது அரசு.
அத்தியாவசிய பொருள் சட்டம் 1955-ன் கீழ், பதுக்கல்காரர்கள் மீதான நடவடிக்கையிலும் தீவிரம் காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் தரப்பட்ட தனி கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்படுகிறது.