திருச்சி அதிமுக எம்.பி. வெற்றி செல்லும், காங்கிரஸ் மனு தள்ளுபடி
திருச்சி: திருச்சி அதிமுக எம்.பி. குமார் வெற்றி செல்லும் என்றும், காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி மக்களவை தொகுதிக்கு கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் பி. குமார், காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் குமார் 4 ஆயிரத்து 335 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மனு தாக்கல் செய்தார். சாருபாலாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தி அதிமுக எம்.பி. குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் மனுவை விசாரித்து காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானின் தேர்தல் மனுவை தள்ளுபடி செய்தார்.
இது குறித்து நீதிபதி கே. சந்துரு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதிமுக வேட்பாளர் குமார் அனுமதிக்க்ப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவு செய்திருப்பதாகவும் சாருபாலா தொண்டைமான் குற்றம் ச்சாட்டியுள்ளார். அவர் தன்னுடைய தேர்தல் ஏஜென்ட் கொடுத்த ஆவணத்தின் அடிப்படையில் தான் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து அவை சரியானவை என்று கூறியுள்ளது.
இந்த வழக்கில் காங்கிரஸ் வேட்பாளருடைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெளிவற்றதாக உள்ளன. அவற்றை நிரூபிக்க போதுமான ஆதாரங்களும் இல்லை.
எனவே, அவரது தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவர் வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரத்தை அதிமுக வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.