நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்: பயணிகள் கட்டணம் உயராது
டெல்லி: 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நாளை (25ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள ரயில்வே அமைச்சர் மம்தா பாணர்ஜி பயணிகள் கட்டணத்தை உயர்த்த மாட்டார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அந்த மாநிலத்துக்கு ஏராளமான புதிய ரயில் திட்டங்களையும் அவர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் மே மாதம் நடைபெறவிருப்பதால் கட்டணங்களை உயர்த்த காங்கிரசும் விரும்பவில்லை. இதனால் மக்களை பாதிக்கும் வகையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது என்று தெரிகிறது.
வருவாய் பெருக்கம் இன்றி ரயில்வே அமைச்சகம் திணறி வருகின்றபோதிலும் புதிய திட்டங்களை அறிவிப்பதில் முனைப்பாக இருக்கிறது.
டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் இதுவரை 2 கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து 3வது கட்ட திட்டத்தை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நாளை அறிவிக்கவிருக்கிறார். 2011-12ம் ஆண்டில் மாடி ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் மாடி ரயில் மும்பை-அகமதாபாத் மற்றும் ஹெளரா-டவுண்டு இடையே இயக்கப்படும் என்று நாளை அறிவிக்கப்பட உள்ளது.