லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கப்பல் விரைந்தது: அமைச்சர் வாசன்
டெல்லி: லிபியாவில் அதிபருக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் புரட்சி தீவரம் அடைந்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை காப்பாற்ற கப்பல் அனுப்பியருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
துனிசீயா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து லிபியாவில் ஜனநாயக ஆட்சி கோரி மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருக்கும் மொம்மர் கடாபிக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்க ராணுவமும் அதிபர் ஆதரவாளர்களும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வாரமாக லிபியா முழுவதும் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும், அதிபர் கடாபியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புரட்சி மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள 18 ஆயிரம் இந்தியர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. அவர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக எம்.வி.ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பலை லிபியாவுக்கு அனுப்பி உத்தரவிட்டு இருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறிதாவது,
இந்த கப்பல் லிபியாவில் உள்ள திரிபோலி, பென்ஹாசியர் துறைமுகங்களுக்கு சென்று அங்கு காத்திருக்கும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கலவரத்தால் பாதிக்கப்படாத துறைமுக நகருக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
பலியான தொழிலாளிக்கு ரூ.1 லட்சம்: கருணாநிதி:
லிபியாவில் பலியான தமிழக தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம், தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா என்பவர் லிபியா நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார். அவர் அங்கு அண்மையில் நேர்ந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்த முதல்வர் கருணாநிதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்த முருகையா குடும்பத்தின் வறுமைநிலை கருதி அக்குடும்பத்திற்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.