சட்டமன்றத் தேர்ர்தல்-துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பணிக்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடக்கவிருக்கிறது. இதையடுத்து காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது,
சென்னையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் செய்வதற்காக கூடுதல் துணைக் கமிஷனர் முத்தரசி தலைமையில் தேர்தல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பிரிவில் உள்ளவர்கள் தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய பணிகள், வாக்குச் சாவடிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பதற்றமான ஓட்டுச் சாவடிகள், மிக பதற்றமான ஓட்டுச் சாவடிகள் ஆகியவை பற்றி கணக்கொடுப்பார்கள். சென்னையில் இதுவரை 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தலின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டோம். அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் நடக்கிறது.
சென்னையில் லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும். எனவே, இங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதற்றமான தொகுதிகள், மிக பதற்றமான தொகுதிகள் பற்றி மட்டுமே கணக்கிடப்பட்டு வந்தது.
ஆனால் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மிக, மிக பதற்றமான தொகுதிகள், வாக்குச்சாவடிகள் எவை எவை என்றும் கணக்கெடுத்து வருகிறோம். சென்னையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு எவ்வளவு போலீசார் தேவை என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் போலீசாரை வரவழைப்போம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களை அதனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.