ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை-சிபிஐ முன்பு அருண் ஷோரி ஆஜர்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் பாஜக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரி இன்று சிபிஐ முன்பு ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே சிபிஐ முன் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், வீட்டில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வரவில்லை. இந் நிலையில் இன்று, ரயில்வே பட்ஜெட் விஷயத்தில் எல்லா மீடியாக்களும் பரபரப்பாக இருந்த நிலையில், சிபிஐ முன் ஷோரி ஆஜரானார்.
கடந்த வாஜ்பாய் ஆட்சியில், 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஷோரி. அப்போது, முதலில் வருவோருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையைக் கடைப்பிடித்தது தொடர்பாகவும், அதில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் ஷோரிக்கு உள்ள பங்கு குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடித்த தொலைத் தொடர்புக் கொள்கைகள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
முன்னதாக சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த ஷோரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு பிரச்சினையை திசை திருப்பப் பார்க்கிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பது இப்போது பிரச்சினை அல்ல. அந்தக் கொள்கையில் எந்தத் தவறும் இல்லை. பிரச்சினை என்னவென்றால் ராசா இப்போது ஊழல் புரிந்து விட்டார் என்பதுதான். ஆனால் அதிலிருந்து அனைவரையும் திசை திருப்பப் பார்க்கிறது இந்த அரசு என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் யாருக்குப் போகிறது, எங்கு போகிறது என்பது கூட தெரியாமல் முக்கியத் தலைவர்களெல்லாம் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் இப்போது ஊழல் வெட்ட வெளிச்சமாகி விட்டதால், அனைவரும் தாங்கள் தப்ப பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கின்றனர்.
நான் 2003ம் ஆண்டு அமைச்சரானேன். 2001ம் ஆண்டு முதல் பாஜக அரசு பதவியில் இருந்தது வரையிலுமான காலகட்டத்திற்குட்பட்ட அனைத்து ஆவணங்களையும் தெளிவாக வைத்துள்ளேன். பத்திரிக்கையாளர்கள் இதைக் கவனிக்க வேண்டும். மாறாக கபில் சிபல் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.
என்னைப் பொறுத்தவரை சிபிஐ ஒரு மரியாதைக்குரிய, கெளரவமான அமைப்பு. தற்போது இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஷோரி.
பாஜக ஆட்சியில் அப்போதைய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோரால் வகுக்கப்பட்ட முதலில் வருவோர்க்கு முதலில் என்ற கொள்கையைத் தான் நானும் பின்பற்றினேன். ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடும் முறையை அவர்களும் கையாளவில்லை என்று ராசா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏலம் விடாததாலேயே நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று தணிக்கைத்துறை அதிகாரி கூறுவதும், அதற்கு ராசாவை பாஜக குற்றம் சாட்டுவதும் தவறானது என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது கூறியுள்ளார்.