லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 4 கப்பல்கள்; 2 விமானங்கள்! - ஜி கே வாசன்
இதற்கான நான்கு சிறப்புக் கப்பல்களை லிபிய தலைநகர் ட்ரிபோலிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி கே வாசன் கூறினார்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு ஜிகே வாசன் அளித்த பேட்டி:
லிபியாவில் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புடன் செய்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலில் கப்பல்துறை அமைச்சகம் ஏற்கனவே காட்டியா என்ற கப்பலை லிபியாவுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, வெளிநாட்டுவாழ் இந்திய நலத்துறை மந்திரி வயலார் ரவி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் கலந்துபேசி இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் லிபியாவிற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடும்..." என்றார்.
ஏர் இந்தியா விமானங்கள்....
இதற்கிடையே ஏர் இந்தியாவின் இரு விமானங்கள் ட்ரிபோலிக்கு விரைந்துள்ளன. அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணியில் அவை ஈடுபடும்.
லிபியாவில் தமிழர் உள்பட 18000 இந்தியர்கள் வசிக்கின்றனர்.