சபரி மலை ஜோதி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!
டெல்லி: சபரிமலை மகரஜோதி விவகாரம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் கடந்த ஜனவரி 14-ந் தேதி மகரஜோதி தரிசனத்தின் போது புல்மேடு பகுதியில் நெரிசல் ஏற்பட்டதில் 102 பக்தர்கள் பலி ஆனார்கள். மேலும் 50 பேர் காயம் அடைந்தனர்.
ஐயப்பன் கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த துயர சம்பவம் நடந்தது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிவதைப் பார்க்க கூட்டம் கூடுவதால் இந்த நிலை ஏற்படுவதாகக் கூறப்பட்டது. இந்த ஜோதி இயற்கையாக தோன்றுவதில்லை என்றும், மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும் ஒரு தரப்பினர் கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து கேரள அரசும், சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டும் விளக்கம் அளித்தன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகரஜோதி விவகாரம் தொடர்பாக தேசிய அறிவியல் மையத்தைச் சேர்ந்த சனால் எடமருகு என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "சபரிமலை பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதி ஆகாயத்தில் தானாக தோன்றுவது இல்லை. பக்தர்களை ஏமாற்றுவதற்காக மனிதர்களால் ஏற்றப்படுவது" என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல் தீபக் பிரகாஷ் வாதாடுகையில்; மகரஜோதி என்பது திருவாங்கூர் தேவசம் போர்டின் ஆதரவுடன் கேரள மின்வாரிய ஊழியர்கள், போலீசார் ஆகியோரால் ஏற்றப்படுவது என்றும், பெரிய கொப்பரையில் கற்பூரத்தை போட்டு எரிப்பதாகவும் கூறினார்.
இப்படி பக்தர்களை ஏமாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மகரஜோதி ஆகாயத்தில் தானாக தோன்றுவது அல்ல என்பதை தெளிவாக அறிவித்து பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அவரது வாதத்துக்கு பின்னர் நீதிபதிகள், இது போன்ற மனுக்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்றும், மனுதாரர் அந்த நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.