காங்கிரஸ் - திமுக தொகுதி உடன்பாடு: நாளை அறிவிப்பு?
கூட்டணி பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முடிவற்ற நிலையைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதியின் 'செய்தி'யுடன் விரைவில் சோனியா காந்தியைச் சந்திக்கிறார் டி ஆர் பாலு.
வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் 80 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்பதில் பிடிவாதமாக உள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால் திமுக தரப்பில் 55 தொகுதிகள் வரை தரத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆட்சியில் பங்கு தர முடியாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு சுற்றுக்களாக நடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுகள் முடிவேதுமில்லாமல் முடிவடைந்தன.
இந்த நிலையில், காங்கிரஸுடனான கூட்டணிக்காக திமுக தரப்பில் சாத்தியமான விஷயங்கள் குறித்த ஒரு வரைவை திமுக தேர்தல் கூட்டணி பேச்சுக் குழுவுடன்ஆலோசித்து முதல்வர் கருணாநிதி தயாரித்துள்ளார். மத்திய அமைச்சர் முக அழகிரியின் யோசனையின் பேரில் இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வரைவை திமுக எம்பி டிஆர் பாலு மூலம் அவர் சோனியாவிடம் தர முடிவு செய்துள்ளார். எனவே இன்றோ நாளையோ டிஆர் பாலு டெல்லி செல்லக் கூடும் என்று தெரிகிறது. சோனியாவை அவர் சந்தித்த உடன் திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்கிறார்கள்.
"கூட்டணிப் பேச்சு விவரங்கள் அனைத்தையும் திமுக தரப்பே சோனியாவிடம் கூறி, அவரை நேரில் சந்திக்க நேரமும் கேட்டுள்ளது. சோனியாவின் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்ததும் கருணாநிதியின் புதிய திட்டத்துடன் பாலு டெல்லி செல்வார்", என திமுக தேர்தல் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இதற்கிடையே, திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடக்கும் எனத் தெரிகிறது.