கருப்பு பணம்: ஸ்விஸ் வங்கிகளிலேயே இருக்கட்டும்-கெஜ்ரிவால் கருத்து
டெல்லி: ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அங்கேயே இருக்கட்டும். அதை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் முறையாக பயன்படுத்தப்பட மாட்டாது என்று சமூக சேவகரும், மாக்சேசே விருது பெற்ற அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அங்கேயே இருக்கட்டும். அதை இந்தியாவுக்கு கொண்டு வநதால் அது முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக ஊழல்வாதிகள் கைகளில் தான் செல்லும்.
முன்னேற்றத்திற்கு பணம் தேவை. ஆனால் இந்த கருப்பு பணம் வந்தால் அதை முன்னேற்றத்திற்காக பயன்படுத்த மாட்டார்கள். ஹஸன் அலி கானிடம் அரசு விசாரணை நடத்தத் துவங்கியவுடன் அவர் தன்னிடம் இருக்கும் பணத்தில் பெரும்பங்கை எங்கோ மாற்றிவிட்டார். அவர் அதை என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள அரசு முயல்கிறது.
விசாரணை ஏஜென்சிகள் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கீழ் பணி புரிகின்றன. சிபிஐ ஒரு விசாரணை நடத்த வேண்டுமென்றால் தங்கள் அனுமதி பெற வேண்டியிருக்கிறது என்றார்.