மன்னார் வளைகுடா பகுதியில் 5 ஆண்டுகளில் 40 சதவீதம் புதிய பவளப்பாறைகள்
கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மன்னார் வளைகுடாவில் 117 வகை பவளப்பாறைகள், 13 வகை கடற்புற்கள், 450 வகை மீன் இனங்கள், கடற்பசு, டால்பின்கள், கடல் ஆமை, இறால், சிங்கி இறால் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.
பவளப்பாறைகள் அமைந்துள்ள பகுதி மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாராக பகுதியாக மட்டுமின்றி மீன்களின் இனப்பெருக்க பகுதியாகவும் இருக்கிறது. மேலு்ம் பவளப்பாறை தீவுகள் கடல் அரிப்பு மற்றும் புயல் சீற்றங்களில் இருந்து காக்கும் கேடயமாகவும் கருதப்படுகிறது.
கடல் உயிரினங்கள் இனம் கண்டறிவது மற்றும் வனப்பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்துதல் குறித்து அமுலாக்கத்துறையின் களப்பணி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அனைவரு்ம் களப்பயிற்சிக்காக தேசிய கடல் வன உயிரின பூங்காவின் முதல் தீவான தூத்துக்குடி வான் தீவுக்கு படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக இயக்குனர் நீரஜ் கூறியதாவது,
கடந்த 10 ஆண்டுகளாக மன்னார் வளைகுடா பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்ததாலும், பவளப்பாறைகள் குறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதனாலும் பழைய பவளப்பாறைகள் மறு உயிர் பெற்று வளர்ச்சியடைந்து வருகின்றன.
பவளப்பாறைகளின் வளர்சசி குறித்த கண்காணிப்பு பணிகளை தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், கோவளத்தைச் சேர்ந்த தேசிய கடல் ஆராய்ச்சி மையம் போன்றவை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுமார் 40 சதவீதம் புதிய பவளப்பாறைகள் வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.