செக்ஸ் சாமியார் பிரேமானந்தா உடல் அடக்கம் செய்யப்பட்டது
விராலிமலை, பாத்திமா நகரில் ஆசிரமம் தொடங்கி நடத்தி வந்தவர் இலங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் என்கிற பிரேமானந்தா. இவர் அங்குள்ள தனது சிஷ்யைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிக்கினார்.
பிரேமானந்தா மீதான வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் பிரேமானந்தா. அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், பின்னர் குளோபல் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 21ம் தேதி பிரேமானந்தா உயிரிழந்தார்.
இதையடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தி அவரதை உடலை பிரேமானந்தாவின் தம்பி ஸ்ரீகுமாரிடம் ஒப்படைத்தனர். அவரும், பிரேமானந்தாவின் சிஷ்யர்களும் உடலைப் பெற்று ஆம்புலன்ஸ் மூலம் பாத்திமா நகர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்று பொதுமக்கள் பார்வைக்கு உடலை வைத்தனர்.
அதன் பின்னர் இன்று காலை 6 மணிக்கு பிரேமானந்தா இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அதன் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரை இருக்கையில் அமர வைத்த நிலையில் அடக்கம் செய்து புதைத்தனர். அந்த இடத்தில் சமாதி கட்ட அவரது சிஷ்யர்கள் திட்டமிட்டுள்ளனர்.