தந்தையை மிஞ்சும் தனயராக உள்ளார் ஸ்டாலின்-வீரமணி வாழ்த்து
சென்னை: சுறுசுறுப்பில் தந்தையை மிஞ்சும் தனயராக உள்ளார். பண்பாட்டில் பலரும் பாராட்டத்தக்க மாமனிதராகவே காட்சியளிக்கின்றார். கட்டுப்பாடு காப்பதில், தனது தந்தையாரைக்கூட கட்சியின் தலைவராகவே எப்போதும் கருதி மரியாதை காட்டத் தவறாத மாண்பாளர் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவர் இன்று காலை கோபாலபுரம் இல்லம் சென்று தனது தந்தையும், முதல்வருமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.
பின்னர் தனது இல்லம் திரும்பிய அவர் அங்குகுடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
திமுக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்டாலினை வாழ்த்தினர்.
தி.க. தலைவர் கி.வீரமணியும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக கி.வீரமணி வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்ததாவது
திமுக பொருளளரும், துணை முதல் அமைச்சருமான ஆற்றல்மிகு அரிமா சகோதரர் மு.க.ஸ்டாலினின் 59வது பிறந்த நாள் விழா இன்று. இந்த 59 ஆண்டுகளுக்குள்ளேயே 40 ஆண்டுப் பொது வாழ்க்கை கண்ட தொண்டறச் செம்மல் இவர்.
அவர் பதவிகளை நோக்கி சென்றதில்லை என்றாலும், மேயர் பதவி முதல் துணை முதல்வர், கட்சியின் பொருளாளர் போன்ற பல்வேறு பதவிகள் அவரை நோக்கிச் சென்று பெருமை பெறுகின்றன.
சுறுசுறுப்பில் தந்தையை மிஞ்சும் தனயராக உள்ளார். பண்பாட்டில் பலரும் பாராட்டத்தக்க மாமனிதராகவே காட்சியளிக்கின்றார். கட்டுப்பாடு காப்பதில், தனது தந்தையாரைக்கூட கட்சியின் தலைவராகவே எப்போதும் கருதி மரியாதை காட்டத் தவறாத மாண்பாளர்.
தொண்டர்நாதனாக தோழர்களின் வற்றாத அன்பைப் பெற்று நாளும் வளரும் நம்பிக்கையின் ஊற்று அவர். சூறாவளிச் சுற்றுப்பயணமும் சுயமரியாதைத் கொள்கை உணர்வும் அவரது இயல்புகளாகவே ஆகிவிட்டன. பெரியார் சமத்துவபுரங்களில் என்றும் வாழுபவர் அவர்.
மாற்றாரும் வேற்றாரும் மதித்து மரியாதை காட்டும் மகத்தான தலைவரான அவர்கள், பல்லாண்டு வாழ்ந்து, கலைஞர் தம் பொற்கால ஆட்சி மீண்டும் பூத்திட தன்னை ஒரு போர்த் தளபதியாக மாற்றிக்கொண்டு, வியூகங்களை வகுத்து வெற்றி பெறும் இந்திர ஜித்தாக - மேகநாதனாக - உலாவரும் அவர் வெற்றி வாகை சூடுவார் - வரும் 2011 பொதுத் தேர்தலிலும் என்பது உறுதி. அவரது உழைப்பின் அறுவடையாக மலரப் போவது மீண்டும் திமுக ஆட்சியே. திமுகவின் விலை மதிப்பற்ற கொள்கைச் சொத்து அவர். தியாகத் தீயில் புடம் போட்ட லட்சியத் தங்கமும்கூட.
பல்லாண்டுப் பல்லாண்டு வாழ்ந்து தொண்டின் இமயமாய் உயர்ந்திட வாழ்த்தும் கோடானு கோடி இதயங்களுடன் தாய்க் கழகமும் இணைந்து வாழ்த்துக்கிறது. வாழ்க தளபதி. வளர்க, அவர்தம் வெற்றிகள் என்று கூறியிருந்தார் வீரமணி.
100 ஆண்டுகள் வாழ பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்து
இதேபோல தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்ளிட்டோரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்ளிடம் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் யசோதா தலைமையில் கொறடா ஞானசேகரன் மற்றும் அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் துணை முதல்வரை வாழ்த்தியிருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, தமிழகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் பல சேவைகள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகவும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாகவும் நெஞ்சார வாழ்த்துகிறோம் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கட்சிக் கொடியேற்றியும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தும் கொண்டாடினர்.