செக்ஸ் சில்மிஷம்-பாக்சிங் சங்க செயலாளர் கைது-கோர்ட்டில் வக்கீல்கள் உதை
சென்னை: குத்துச் சண்டை வீராங்கனைகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான தமிழ்நாடு குத்துச் சண்டை சங்க மாநிலச் செயலாளர் கருணாகரன் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு குத்துச் சண்டை சங்க செயலாளராக இருப்பவர் கருணாகரன். இவர் மீது கவிதா என்ற குத்துச் சண்டை வீராங்கனை போலீஸில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார்.
அதில் தன்னிடமும் வேறு சில வீராங்கனைகளிடமும் கருணாகரன் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகவும், தேவையில்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தனக்கு இணங்காதவர்களிடம் பாரபட்சம் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் தற்போது கருணாகரனைக் கைது செய்துள்ளனர். அவர் மீது பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தன் மீதான புகார்களை மறுத்துள்ளார் கருணாகரன். இதுகுறித்து அவர் கூறுகையில், கவிதாவை தேர்வு செய்யாத கோபத்தில் இப்படி என் மீது அபாண்டமான, பொய்ப் புகார்களை கிளப்பியுள்ளார் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கருணாகரனை போலீஸார் எழும்பூர் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அப்போது அவரை திடீரென வக்கீல்கள் சிலர் திரண்டு வந்து சரமாரியாக தாக்கினர். கருணாகரனுடன் வந்த அவரது நண்பர்கள் இருவருக்கும் அடி உதை விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் கருணாகரனை பத்திரமாக கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி, கருணாகரனை 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் கருணாகரனை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர் போலீஸார்.