பிரசாரத்திற்கு அத்வானி, 4 மாநில முதல்வர்கள் உள்பட 20 பாஜக தலைவர்கள் வருகை!!
சென்னை: ஒரு கட்சியும் தங்களைக் கூட்டணியில் சேர்க்காமல் 'லூசில்' விட்டாலும் கூட சற்றும் மனம் தளராமல் தன் பாட்டுக்கு தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள பாஜக, தேர்தல் பிரசாரத்திற்காக அத்வானி, 4 மாநில முதல்வர்களை வரவழைத்து கலக்கப் போகிறதாம்.
தமிழக அரசியல் களத்தில் யாரும் கண்டு கொள்ளாத கட்சிகளில் பாஜகவும் ஒன்று. இருந்தாலும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் தன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியுள்ளது பாஜக.
விருப்ப மனுக்களை தொண்டர்களிடமிருந்து பெற்றுவருகின்றனர். நேற்று மட்டும் 800 பேர் விருப்ப மனுக்களைக் கொடுத்துள்ளனர். இன்று 17 மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மனு கொடுத்தனராம்.
இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
234 தொகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு இன்றுடன் வாங்கி முடிப்போம். நாளை கட்சியின் தேர்தல் குழு விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யும். அப்போது அகில இந்திய பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன், முரளிதரராவ், சதீஷ் ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் ஆய்வு செய்யப்படும்.
தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையிடம் 9-ந்தேதி ஒப்படைக்கப்படும். 10-ந்தேதி அகில இந்திய தேர்தல் குழு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறோம்.
அத்வானி-சுஷ்மா-வருண்-மோடி-எடியூரப்பா
ஒரு சில குறிப்பிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தனி கவனம் செலுத்துவோம். தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜேட்லி, வருண்காந்தி எம்.பி., ஹேமமாலினி, சித்து, முதல்வர்கள் நரேந்திரமோடி, எடியூரப்பா, ரமன்சிங், சிவராஜ்சவான் உள்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் வருகிறார்கள்.
கூட்டணி குழப்பத்தால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை. எங்களுக்கு என்று தனி வாக்கு வங்கி உள்ளது என்றார் அவர்.
திமுக, அதிமுக ஆகியவை இன்னும் தொகுதிப் பங்கீட்டையே முடிக்கவில்லை. ஆனால் அந்தப் பிரச்சினையே இல்லாத பாஜக, பிரசாரத்திற்காக 20க்கும் மேற்பட்ட தலைவர்களை பல்வேறு மாநிலங்களிலிருந்து 'இறக்குமதி' செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.