திமுக-விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது
சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடக் கோரி விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று காலை நேர்காணல் தொடங்கியது.
திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி பல ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான இந்த நேர்காணல் குழுவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தினசரி காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது.
முதல் நாளான இன்று காலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.
தொகுதியில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு, கட்சிக்கு ஆற்றிய பணிகள், செலவு செய்யக் கூடிய அளவு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
இன்று மாலை விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து விருப்ப மனு செய்துள்ளவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் நாட்கள், மாவட்டங்கள் விவரம்:
மார்ச் 9 - சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு (காலை)
நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் (மாலை)
மார்ச் 10 - புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி (காலை)
கரூர், பெரம்பலூர், அரியலூர் (மாலை)
மார்ச் 11 - நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சை, கடலூர் (காலை)
விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு (மாலை)
மார்ச் 12 - திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் (காலை)
திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை (மாலை)
மார்ச் 13 - புதுச்சேரி மற்றும் காரைக்கால்.