கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
ஜொயலலிதா 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போடியிலும், 1991ம் ஆண்டில் பர்கூர், காங்கேயம் தொகுதியிலும், 1996ம் ஆண்டு தேர்தலில் பர்கூரிலும் போட்டியிட்டார். 2001ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலிலும் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொகுதிகள் மறுசீரமைப்பின்படி ஆண்டிப்பட்டி தொகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்தத் தொகுதியை தவிர்க்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அவர் திருச்சி ஸ்ரீரங்கம், அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அந்தியூர் தொகுதிகள் தேந்தெடுக்கப்பட்டுள்ளன.
1977ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் கோபியில் அதிமுக 8 முறை போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு அதிமுக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தபோதுகூட ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார்.
இதனால் இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று அதிமுக கருதுகிறது.
இந்தத் தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை என்பதும் தற்போதைய கோபி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கூட ஜெயலலிதா கோபியில் போட்டியிடக் கோரித்தான் விருப்ப மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயலலிதா கோபி வந்தால் தங்குவதற்காக, குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீட்டை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.