63 தொகுதிகள்: ஐவர் குழு நாளை ஆய்வு-கருணாநிதியுடன் தங்கபாலு ஆலோசனை
பெரும் இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. இதில் 61 தொகுதிகளை திமுக தருகிறது. பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு தொகுதியை வழங்குகின்றன.
இந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து கருணாநிதியிடம், தங்கபாலு ஆலோசித்தார். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தர வேண்டும் என்று தங்கபாலு அப்போது கருணாநிதியிடம் வலியுறுத்தினார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முதல்வருடன் ஆலோசனை செய்தோம். காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு சாதகமான தொகுதிகள் எவை எவை என ஏற்கனவே கண்டறிந்துள்ளோம். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விபரம் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டுக் குழு நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின்னர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
நாளை ஐவர் குழு ஆய்வு:
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் வெற்றி பெற்ற தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளை தேர்வு செய்து அந்தப் பட்டியலைத் திமுகவிடம் வழங்கவுள்ளது காங்கிரஸ். இதுதொடர்பாக முடிவெடுக்கவும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்யவும் நாளை காங்கிரஸ் ஐவர் குழு சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
இதில் தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் முடிவு எடுத்த பின்னர் மீண்டும் திமுகவை சந்தித்து விருப்ப தொகுதிப் பட்டியலை அளிக்கவுள்ளது காங்கிரஸ்.
திமுகவும் கூட்டம் போடுகிறது:
இதேபோல கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை முடிவு செய்வதற்காக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இது முடிவடைந்ததும் தொகுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். காங்கிரஸ் ஐவர் குழுவும் நாளையே திமுக குழுவை சந்திக்கும் என்று தெரிகிறது.
அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை முடிந்து தொகுதிகள் இறுதி செய்யப்பட்டவுடன் முதல்வர் கருணாநிதி, பட்டியலை வெளியிடுவார்.