63 தொகுதிகள் எவை எவை?: திமுக-காங்கிரஸ் இடையே மீண்டும் இழுபறி!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சண்டை, சச்சரவுகளுக்குப் பின் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவை எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.
இன்று இந்த இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் இரண்டு முறை சந்தித்துப் பேசியும், முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் குழுவினர் சந்தித்த பின்னரும் தொகுதிகளை இறுதி செய்ய முடியவில்லை.
காங்கிரசுக்கான தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்எல்ஏ ஆகியோ் அடங்கிய ஐவர் குழு இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கோஷ்டியும் தங்களுக்குத் தேவையான தொகுதிகள் பட்டியலை இந்தக் குழுவிடம் நீட்டி, அந்தத் தொகுதிகளைப் பெறுமாறு கோரின.
இதையடுத்து எந்தெந்தத் தொகுதிகளை கேட்பது என்பது குறித்து ஆலோசித்து முடித்த ஐவர் குழு காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு வந்தது. அவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-திமுக குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின. திமுக சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முதல்வருடன் சந்திப்பு:
சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு இரு குழுவினரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை விவரங்களை எடுத்துரைத்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளை இனம் காணுவது குறித்து ஐவர் குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மீண்டும் இன்று மாலை சந்தித்துப் பேசுவோம். இன்று இரவுக்குள் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இனம் காணப்பட்டுவிடும் என்றார்.
மாலையில் மீண்டும் சந்திப்பு:
இதையடுத்து காங்கிரஸ் குழுவினர் மாலை 6 மணிக்கு மீண்டும் அறிவாலயம் வந்து திமுக குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து இன்று இரவே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதில் காங்கிரசுக்கும் காங்கிரஸ் கோரும் தொகுதிகளைத் தருவதில் திமுகவுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 48 கடந்த தொகுதிகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் அந்தக் கட்சிக்கு திமுக ஒதுக்க முன் வந்துள்ளதாகவும், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு மட்டுமே இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிகிறது.
ஆனால், இந்த 15 இடங்களில் காங்கிரசுக்கு தாங்கள் பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்திலும், நகர்ப் பகுதிகளிலும் அதிக இடங்களை திமுக ஒதுக்கியதால் சிக்கல் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
அதே போல வட மாவட்டங்களில் காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. வட மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. மேலும் பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இந்த மாவட்டங்களில் அதிக இடங்களை திமுக ஒதுக்கியாக வேண்டும்.
இதனால் வட மாவட்டங்களில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் தர திமுக மறுத்துள்ளது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்திலும் தான் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை திமுக ஒதுக்குவதாகத் தெரிகிறது.
இதை காங்கிரஸ் ஏற்க மறுப்பதால் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் இரு கட்சியினரும் நாளை மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளனர்.