பணம் விளையாடும் 100 தொகுதிகள்..தேர்தல் ஆணையம் 'உஷார்'!
இதில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷ்னர் பிரவீன்குமார் கூறியுள்ளார்.
தேர்தல் முடியும் வரை இந்த சோதனைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் ரூ. 2 லட்சத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் நடத்தப்பட்டல வாகன சோதனைகளில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்டுள்ளது.
குறிப்பாக 100 தொகுதிகளில் அதிக அளவு பணம் விளையாடும் என்று தேர்தல் கமிஷன் கணித்துள்ளது.
இடைத் தேர்தல் நடந்த மதுரை மாவட்டத் தொகுதிகள்,
அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகமாக பணப் புழக்கம் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
எனவே, அந்த தொகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை:
இந் நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜீவனந்தத்தின் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் இவரது காரிலிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை ஏதோ ஒரு கட்சிக்கு இவர் தர இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.
வாகன சோதனையில் சிக்கிய ரூ.3.5 கோடி:
இந் நிலையில் மதுரை தேனி, உசிலம்பட்டி, மேலூர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.5 கோடி பணம் சிக்கியது.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் இருந்து மதுரைக்கு வந்த காரை சோதனை போட்டதில் ரூ.1.6 கோடி சிக்கியது. உசிலம்பட்டியில் உள்ள தி.விலக்கு என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது காரில் கொண்டு வரப்பட்ட ரூ.89.50 லட்சம் சிக்கியது.
அதே போல புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களிலும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது.