கூடலூர் பதற்றம் நிறைந்த தொகுதி: திமுகவினர் காரில் போலீஸ் சோதனை
மேட்டுப்பாளையம்: ஊட்டி அருகேயுள்ள நெல்லியாலம் நகர தி.மு.க. செயலாளர் வீரமணி வரும் சட்டசபைத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்றுவி்ட்டு தனது கட்சியினருடன் ரயில் மூலம் கோவை திரும்பி, அங்கிருந்து திமுக கொடி கட்டப்பட்ட காரில் சொந்த ஊர் கிளம்பினார்.
மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின் ரோட்டில் கார் பஞ்சராகிவிட காரை நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். காரில் இருந்த சூட்கேஸ்களை வெளியே எடுத்து சோதனையிட்டனர்.
இதையடுத்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த காரை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் காரில் வந்த திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.
தேர்தலில் பணப் புழகத்தைத் தடுக்க மாநிலம் முழுவதுமே அனைத்துக் கட்சியினரின் கார்களை தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் போலீசார் சோதனையிட்டு வருவதும், பல கார்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கூடலூர் பதற்றம் நிறைந்த தொகுதியாக அறிவிப்பு:
இந் நிலையில் தமிழ்நாட்டில் கேரள- கர்நாடக எல்லையில் உள்ள கூடலூர் தொகுதி பதற்றம் நிறைந்த தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதி இவ்வாறு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வள்ளியூரில் 17 பேர் கைது-தேர்தல் ஆணையம் அதிரடி:
இந் நிலையில் வள்ளியூர் போலீஸ் சப்-டிவிஷனில் கடந்த தேர்தலில் கலகம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்தலை அமைதியாக நடத்த வளர்ந்து வரும் ரவுடிகளின் பட்டியல் தயாரித்து அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த தேர்தல்களில் வாக்குச்சாவடிகளில் ரகளை செய்தது, குறிப்பிட்ட பகுதிகளில் மக்களை ஓட்டுப் போட விடாமல் விரட்டியது, தேர்தல் பணிகளை செய்யவிடாமல் அதிகாரிகளை தடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் யோசனையின் பேரில் போலீசார் தயாரித்தனர். இதையடு்த்து அந்த பட்டியலின்படி வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, ராதாபுரம், கூடன்குளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நேரத்தில் தகராறு செய்தவர்கள் பழைய வழக்குகளின்படி அடையாளம் காணப்பட்டு மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.
இது போல் வள்ளியூர் போலீஸ் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நேரத்தின் போது கலகம் விளைவிப்போர் என சந்தேகம்படும் நபர்கள் அடங்கிய புதிய ரவுடிகள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் விரைவில் கைது படலம் இருக்கும் என தெரிகிறது.