திமுக, அதிமுக ஊழல் கூட்டணிகள்-சுப்பிரமணிய சாமி
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், அடுத்த மாதம் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது தொடர்பாக பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இது கூட்டணி என்று கூற முடியாது.
ஜனதா கட்சி போட்டியிடுவதில் இதுவரை 7 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருவல்லிக்கோணி, ஸ்ரீரங்கம், குன்னூர், மதுரை மத்திய தொகுதி, மேலூர், திருத்தணி, விழுப்பரம் ஆகியன முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இவற்றில் பாஜக போட்டியிடும் தொகுதியில் ஜனதா கட்சியோ அல்லது ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதியில் பாஜகவோ போட்டியிடாது.
எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறி்த்து இன்னும் 3 நாட்களில் அதிகாரப் பூர்வமாக அறிவிப்போம். ஊழல் கூட்டணிகளான திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நான் வழக்கு தொடர்ந்த பிறகு தான் ராஜா கைதானார், கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் போராடுவதால் தான் நான் வழக்கு தொடரவில்லை. அவர்கள் எனக்கு உதவி செய்தால் மீனவர்கள் பிரச்சனை குறிதத்து வழக்கு தொடரவும் நான் தயார் என்றார்.