ஜெ.வை சந்தித்தார் ரங்கசாமி : தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
சென்னை: அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதுச்சேரி ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகதான் கூட்டணித் தலைவர். ஆனால் புதுச்சேரியில் யார் தலைவர் என்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக ஏற்க எந்தத் தயக்கமும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவரையே புதுவை கூட்டணித் தலைவராகவும் அதிமுக ஏற்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் அதிமுக 17 தொகுதிகளில் போட்டியிட்டது. கண்ணன் தலைமையிலான கட்சிக்கு 9 சீட்டும், மதிமுக 2, விடுதலைச் சிறுத்தைகள் 1, மதச்சார்பற்ற ஜனதாதளம் 1 என போட்டியிட்டன. இந்த முறை சிறுத்தைகள், கண்ணன் கட்சி இல்லை. பதிலாக ரங்கசாமி வந்துள்ளார். இடதுசாரிகள் சேர்ந்துள்ளன. கூடவே தேமுதிகவும்
புதிதாக இணைந்துள்ளது. எனவே கூட்டணி பலமடைந்துள்ளது. அதேபோல தொகுதிப் பங்கீடும் சிக்கலாகவே உள்ளது.
இந்நிலையில் இன்று காலை ரங்கசாமி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.