விரைவில் பாமகவுக்கான தொகுதிகள் முடிவாகும்-ஜி.கே.மணி
பாமகவுக்கு திமுக கூட்டணியில் 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் திமுகவும், பாமகவும் ஈடுபட்டுள்ளன. தற்போது இது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று பாமக தலைவர் ஜி.கே.மணி, ஆர்.வேலு, ஏ.கே.மூர்த்தி,வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பாமக குழு அறிவாலயம் வந்தது. அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவை சந்தித்துப் பேசியது.
பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கூட்டணியில், நான்கைந்து கட்சிகள் இருப்பதால் ஒரே தொகுதியை அவை கேட்பதால் அதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. விரைவில் அவை முடிவாகி தொகுதிப் பட்டியலை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.
ராமதாஸ் முன்னிலையில் நேர்காணல்
இந்த நிலையில் இன்று பாமக நேர்காணல் தொடங்கியது. கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் தேர்வு நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு இது தொடங்கியது.