ஆயிரம் விளக்கிலிருந்து வேளச்சேரிக்கு மாற ஸ்டாலின் திட்டம்?
முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஒரே தொகுதியில், அதுவும் பாதுகாப்பான தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுவது வழக்கம். முதல்வர் கருணாநிதி சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அதேபோல ஜெயலலிதா, ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வருகிறார். மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
ஆனால் வருகிற சட்டசபை தேர்தலில் இந்த மூவருமே தொகுதி மாறிப் போட்டியிடப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதி திருவாரூரிலிருந்து போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் அல்லது கோவை பக்கம் கவுண்டம்பாளையம் தொகுதியில் நிற்கலாம் என்று தெரிகிறது. அதேபோல மு.க.ஸ்டாலின், வேளச்சேரி தொகுதியிலிருந்து போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிதான் வேளச்சேரி. வேளச்சேரி தொகுதியின் கீழ் வரும் பகுதிகள் முன்பு தாம்பரம் தொகுதியில் இடம் பெற்றிருந்தன.
திமுகவின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் தாம்பரமும் ஒன்று. அந்தத் தொகுதியின் கீழ் முன்பு வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் இருந்ததால், இந்த தொகுதி திமுகவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
ஸ்டாலின், வேளச்சேரி தொகுதியை தேர்வு செய்ய இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இங்குதான் ஸ்டாலினின் வீடு உள்ளது. தற்போது அவர் இங்கு வசிக்கவில்லை என்ற போதிலும்,அவர் முன்பு இங்கு குடியிருந்ததால், தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. எனவே ஸ்டாலின் இங்கு போட்டியிட வேண்டும் என்பது இப்பகுதி திமுகவினரின் விருப்பமாகும்.
அதேசமயம், இப்பகுதியில் வசித்து வரும் மதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான மணிமாறனும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரும் களம் இறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான உழைப்பாளியான மணிமாறன், சிறந்த பீல்ட் ஒர்க்கரும் கூட என்பதால் பிரசாரத்தில் கடுமையாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தால் இந்தத்தொகுதியின் பிரசாரக் களம் படு சூடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.