சட்டசபை தேர்தல்: கோவை வரும் ஜெ. தங்க பங்களா தயார்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் கோவை வந்தால் தங்குவதற்காக காளப்பட்டியில் சொகுசு பங்களா தயாராகி வருகிறது. இந்த பங்களா தான் அப்பகுதி மக்களின் ஹாட் டாக்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கோவை மாவட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், கோவையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. இதனால் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என்று பேசப்படுகின்றது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு கவுண்டம்பாளையம் பெரிய தொகுதியாகிவிட்டது. இங்கு சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் வரும் காளப்பட்டி பேரூராட்சியில் ரத்தினகிரி வீதியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்குவதற்கான சொகுசு பங்களா தயாராகி வருகிறது.
இந்த பங்களா கோவை விமான நிலையத்தில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் தான் உள்ளது. மேலும், இது பாதுகாப்பானது என்று கருதப்படுகின்றது.
இந்த சொகுசு பங்களா கோவையைச் சேர்ந்த பஞ்சாலை உரிமையாளர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. பங்களாவிற்கு எதிர்புறம் உள்ள நிலத்தில் ஹெலிபேட் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த சில நாள்களாக பங்களாவை சுத்தப்படுத்தும் பணி படுவேகமாக நடந்து வருகிறது. பங்களாவின் சுற்றுச்சுவர் முழுவதும் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. பங்களாவைச் சுற்றியுள்ள பகுதியும், மிகுந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது.
அதேபோல பங்களாவுக்குள் குளுகுளு வசதியுள்ள அறைகளும் போதிய அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,
ஜெயலலிதா ஏற்கனவே ஆண்டிபட்டி, பர்கூர், காங்கயம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வரும் தேர்தலில் காங்கயம் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடலாம் என்றனர்.
அவர் கவுண்டம்பாளையம் அல்லது காங்கயத்தில் போட்டியிடாவிட்டாலும் அவர் தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது இந்த பங்களாவில் தங்குவார் என்று தெரிகிறது.