சட்டசபை தேர்தல்: காங்கிரஸார் போட்ட கண்டிஷனால் திமுக அதிர்ச்சி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியாவதும் கொடுக்க வேண்டும், இல்லையெனில் அங்குள்ள ஐந்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரசார் அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மொத்தம் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தர்மபுரி, தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.
மக்களவைத் தொகுதிவாரியாக கணக்கிட்டால் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தருமபுரி, விழுப்புரம் (தனி), திருச்சி, தேனி தொகுதிகள் இல்லை.
இதில் தர்மபுரி மாவட்த்தில் உள்ள 5 தொகுதிகளில் ஒரு தொகுதியையாவது காங்கிரஸுக்கு தரவில்லை என்றால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப் பட்டி, அரூர் ஆகிய 5 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக மாவட்ட காங்கிரசார் அறிவித்துள்ளனர்.
காங்கிரசாரின் இந்த அறிவி்ப்பு திமுகவினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.