ஆற்காடு வீராசாமி-கோ.சி.மணிக்கு வாய்ப்பு தராத திமுக
கடந்த தேர்தலில் ஆற்காடு சென்னை அண்ணா நகரிலும் கோ.சி.மணி கும்பகோணத்திலும் வெற்றி பெற்றனர். மணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாததால் வாய்ப்பு தரப்படவில்லை. ஆற்காடு ஏன் ஒதுக்கப்பட்டார் என்று தெரியவில்லை.
அதே போல மேலும் பல எம்எல்ஏக்களுக்கும் இந்தத் தேர்தலில் திமுக வாய்ப்பு தரவில்லை. அவர்களது விவரம்:
வி.எஸ்.பாபு (புரசைவாக்கம்), ஏ.சின்னச்சாமி (பேரணாம்பட்டு), சூரிய குமார் (நாட்ராம்பள்ளி), மாலைராஜா (திருநெல்வேலி), அப்பாவு (ராதாபுரம்), ராஜன் (நாகர்கோவில்), ரெஜினால்டு (பத்மனாபுரம்), ராணி (உப்பிலியாபுரம்), துரை. சந்திரசேகரன் (திருவையாறு).
எம்.ராஜ்குமார் (பெரம்பலூர்), உதயம் சண்முகம் (அறந்தாங்கி), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), வேதரத்தினம் (வேதாரண்யம்), க.அன்பழகன் (குத்தாலம்), சுந்தர் (உத்திரமேரூர்).
கடந்த முறை திமுக 132 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு சில தொகுதிகள் மாறிவிட்டன. மேலும் பல புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பேராசிரியர் அன்பழகன் இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியிலும், தா.மோ.அன்பரசன், வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் இந்த முறை வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இவர்களின் தொகுதிகள் மாறியுள்ளன.
மாற்று கட்சிகளில் இருந்து வந்த 6 எம்எல்ஏக்களுக்கும் சான்ஸ்:
அதே போல மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வசேக்த ர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோருக்கும், மதிமுகவிலிருந்து வந்த மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்த சி.கோவிந்தசாமி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாய்ப்பு:
மேலும் திமுக முன்னணித் தலைவர்கள் சிலரின் வாரிசுகளுக்கு முதன்முறையாகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மறைந்த என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி மாதவரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் மகன் ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்கு திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
119 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள் 70 பேர், வழக்கறிஞர்கள் 26 பேர், முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர், டாக்டர்கள் 3 பேர், பொறியாளர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கபாலு, திருமா, ராமதாஸ், பெஸ்ட் ராமசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு:
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
முதலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்துப் பேசினார்.
பின்னர், தியாகராயர் நகரில் உள்ள கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாசை ஸ்டாலின் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
கூட்டணி கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும்-ஸ்டாலின்:
முன்னதாக நேற்று சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா திமுக ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.
இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக அரசு உறுதுணையாக இருக்கும்.
அதிமுக கூட்டணியின் குழப்ப நிலைப் பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது அவகர்களது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.
தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்றார்.
கருணாநிதியுடன் புதுவை திமுகவினர் ஆலோசனை:
இந் நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதியை புதுவை திமுகவினர் சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினர்.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு 8 தொகுதிகள் தரவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதை திமுக ஏற்க மறுப்பதால் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் ஆர்.வி. ஜானகிராமன் தலைமையிலான திமுக குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே திமுகவுக்கு 11 தொகுதிகள் வரை தர காங்கிரஸ் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.