ஜப்பான் அலுவலகம் மூடப்பட்டதா? - இன்போஸிஸ் மறுப்பு
முன்னணி ஐடி நிறுவனமான இன்போஸிஸுக்கு ஜப்பானிலும் கிளைகள் உள்ளன. டோக்யோ, ஓசாகா, நகோயா போன்ற நகரங்களில் உள்ள இந்த கிளைகளில் 400 இந்தியப் பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நில நடுக்கம், சுனாமி மற்றும் அணுக்கதிர் வீச்சு காரணமாக, அந்நிறுவனம் இந்தியப் பணியாளர்களை திரும்ப அழைத்துக் கொண்டது.
இதுவரை 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். பணியாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டதால், இன்போஸிஸ் அலுவலகங்களும் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்துள்ளது இன்போஸிஸ்.
இதுகுறித்து நேற்று அந்நிறுவனம் விடுத்துள்ள விளக்க அறிக்கையில், "கதிர்வீச்சுப் பிரச்சினையால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பெரிதாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கு இப்போதும் பணிகளைத் தொடர்ந்து வருகிறோம். சிங்கப்பூர், ஷாங்காய் போன்ற நகரங்களில் உள்ள எங்கள் அலுவலகங்கள் கூடுதலாகத இந்த பணிகளை கவனிக்கின்றன..." என்று கூறியுள்ளது.