பிரச்சாரத்தில் விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக்கை விமர்சிக்க மாட்டேன்!-குஷ்பு
சென்னை: வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளதாகவும், ஆனால் விஜயகாந்த், சரத்குமார் மற்றிம் கார்த்திக் போன்றவர்களை விமர்சித்துப் பேசமாட்டேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு திமுகவின் முக்கிய பேச்சாளராக இந்தத் தேர்தலில் களமிறங்க உள்ளார். ஏற்கெனவே அவர் சில மேடைகளில் அதிமுகவை எதிர்த்துப் பேசி வரும் நிலையில், அவரது தேர்தல் பிரச்சாரம் பெரிதாக களைகட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கட்சியின் பேச்சாளர் என்ற முறையில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். ஆனால் எனக்கென்று சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டுதான் இந்தப் பிரச்சாரத்தில் இறங்குகிறேன். முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கிப் பேச மாட்டேன். குறிப்பாக சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோரை விமர்சிக்க மாட்டேன்.
காரணம், அடிப்படையில் நான் திரைப்படத் துறையைச் சேர்ந்தவள் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று கூறியுள்ளார்.
இந்த மூன்று நடிகர்களுடனும் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக தாக்கிப் பேசிவரும் நிலையில், குஷ்பு அதற்கு பதிலடி தருவாரா, அமைதி காப்பாரா? பார்க்கலாம்.