கேரள முதல்வரிடம் சொத்தே இல்லை: கையிருப்பு ரூ. 3ஆயிரம்!
கேரள முதல்வர் அச்சுதானந்தன்(87) வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து சொத்துக் கணக்கு விவரத்தையும் சமர்பித்துள்ளார். வரும் தேர்தலில் அவர் மலம்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.
கையில் ரூ. 3 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 80 ஆயிரத்து 295 உள்ளதாம். கடந்த 2009-10-ம் ஆண்டிற்கான வரிமான வரி செலுத்தியதின்படி அவரது வருமானம் ரூ. 3 லட்சத்து 43 ஆயிரத்து 994.
அரசு ஓய்வூதியம் பெறும் அச்சுதானந்தன் மனைவி வசுமதி கடந்த 1982-ம் ஆண்டு ரூ. 18 ஆயிரம் கொடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பரவூரில் 10 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். தற்போது அதன் மதிப்பு ரூ. 1 லட்சம். மேலும் அவரிடம் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 100 கிராம் தங்க நகைகள் இருக்கிறது.
வசுமதியின் கையிருப்பில் ரூ. 10 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 5 லட்சத்து 70 ஆயிரத்து 635-ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் கைரலி தொலைக்காட்சியை நடத்தும் மலையாளம் கம்யூனிகேஷன்ஸில் ரூ. 5 ஆயிரத்திற்கு பங்குகளும் உள்ளன.