என்ஆர் காங்-அதிமுக உடன்பாடு: இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளில் ரங்கசாமி போட்டி
புதுவை மாநில தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ்.
இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் நீடித்து வந்ததால், நேற்று 11 தொகுதிகளுக்கு தனியாக வேட்பாளர்களை அறிவித்திருந்தார் ரங்கசாமி. அதிமுக 30 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே இன்று தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 13 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகள் போக, மீதி தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இரு தொகுதிகளில் போட்டி...
இந்திரா நகர் மற்றும் கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி தொழிலாளர் நல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அவர் தனது வேட்புமனுவை அளித்தார்.